உலகம்
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

Published On 2022-05-24 06:50 GMT   |   Update On 2022-05-24 06:50 GMT
இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு:

கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது.

இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது.



தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது.

இதே போல் டீசல் விலையில் 38.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் ரூ.400 ஆக உள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News