உலகம்
கொரோனா தொற்று

சீனா ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா- இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Published On 2022-04-19 07:04 GMT   |   Update On 2022-04-19 07:04 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது.

தினமும் 20,000 தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஷாங்காய் நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஷாங்காங் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்தனர் என்று அந்நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷாங்காயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஷாங்காய் நகராட்சி சுகாதார ஆணையம் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 7 பேரும் 60 மற்றும் 101 வயதுடையவர்கள். அவர்கள் அனைவரும் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற அடிப்படை நோய்களை கொண்டிருந்தனர்.

நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதனால் இறப்புக்கான நேரடி காரணம் அடிப்படை நோயகளாகும்.

இவ்வாறு ஆணையம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள்.. ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்லமாட்டார்- வெள்ளை மாளிகை அறிக்கை
Tags:    

Similar News