உலகம்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எல்லைப் போராட்டம் எதிரொலி - 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்

Published On 2022-02-15 07:47 IST   |   Update On 2022-02-15 07:47:00 IST
கனடாவில் அரசு உத்தரவை எதிர்த்து லாரி டிரைவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கனடா:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
 
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும். போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். 1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து. போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கனடா. அமெரிக்கா இடையிலான பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Similar News