செய்திகள்
நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சரண் அடைய 30 நாள் கெடு - இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அதிரடி

Published On 2020-10-08 21:38 GMT   |   Update On 2020-10-08 21:38 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 70) 2 ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டனுக்கு சென்றவர் நாடு திரும்பவில்லை.

அவர் தனக்கு ஊழல் வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு 8 வாரங்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வழக்குகள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதிகள் அமீர் பரூக், மோசின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் அவருக்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். இதை 2 நாளிதழ்களில் வெளியிடவும் உத்தரவிட்டனர்.

இதன்படி அவர் 30 நாளில் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகும் அவர் கோர்ட்டில் சரண் அடையாவிட்டால், அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார், அவரது சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News