செய்திகள்
கலிபோர்னியா காட்டுத்தீ

கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ - 7 பேர் பலி

Published On 2020-09-08 21:18 GMT   |   Update On 2020-09-08 21:18 GMT
கலிபோர்னியாவில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களில் காட்டுத்தீப்பற்றி எரிந்து வருகிறது. 
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

தெற்கு கலிபோர்னியா பகுதிகள், லாஸ் ஏஞ்சல்ஸ், சன் பெர்னண்ர்டினோ, சாண்டியாகோ உள்ளிட்ட மாகாணங்களில் புதிதாக காட்டுத்தீ பரவி வருகிறது. 

கலிபோர்னியாவில் 23 காட்டுத்தீ விபத்துக்கள் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த கலிபோர்னியா காட்டுத்தீயால் இந்த ஆண்டு மொத்தமாக இதுவரை 20 லட்சம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளன.

காட்டுத்தீ காரணமாக வீடுகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 300-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 14 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். 

மேலும், காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த கலிபோர்னியா மாகண கவர்னர் ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியுள்ளார்.
 

Tags:    

Similar News