செய்திகள்
வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்

ஆப்கானிஸ்தான்: வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

Published On 2020-08-28 02:25 IST   |   Update On 2020-08-28 02:25:00 IST
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து உயிர் தப்பியவர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் பர்வான், வார்டக் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இரவு என்பதால் மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் புதைந்த பலரின் நிலைமை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். 

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பர்வான் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகளின் ராணுவ தளங்களில் மிகப்பெரிய தளமும் இந்த மாகாணத்தில் (பஹ்ரம் மாவட்டம்) தான் அமைந்துள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே இப்பகுதியில் அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், பர்வான் மாகாணத்தின் பஹ்ரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிர் தப்பிய சிலர் வாகனம் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் சென்ற வாகனம் அமெரிக்க படை தளத்தை கடந்த போது அப்பகுதியில் மறைந்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவது அமெரிக்க படையினர் என தவறுதலாக எண்ணி திடீர்
துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வெள்ளத்தில் இருந்து உயிர்பிழைத்து வேறு இடத்திற்கு சென்றுகொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் முயற்சியுடன் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News