தேர்தலில் வென்று இலங்கை அதிபராகி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன்- ராஜபக்சே தம்பி சொல்கிறார்
கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் ராஜபக்சேவின் அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த உள் நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
உள் நாட்டு போர் முடிந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் 253 பேர் பலியாகினர்.
இது குறித்து கோத்தபய ராஜபக்சே நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். உள் நாட்டு போரின் போது உளவுத்துறையும், வெளிப்புற கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாக இருந்தது. அதை தற்போதைய அரசு பிரித்து தனி தனியாக மாற்றிவிட்டது.
அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் ஒரு பீதியான குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வருகிற டிசம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
அதில் நான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி. அதில் வெற்றி பெற்று உளவுத்துறை மற்றும் வெளிப்புற கண்காணிப்பை மீண்டும் உருவாக்கி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன்” என்றார். #GotabayaRajapaksa #srilankablasts