செய்திகள்

மலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி

Published On 2019-02-15 09:08 GMT   |   Update On 2019-02-15 09:08 GMT
அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றார். தற்போது தனது அனுபவத்தை கூறியுள்ளார். #USmanKilledLion
டென்வர்:

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மலை சிங்கங்கள் 4500 முதல் 5500 வரையிலான எண்ணிக்கையில் வசிக்கின்றன.  

இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அன்று  காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக டிராவிஸ் காஃப்மன்(31) ஓடிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. அது 80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும்.

சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். டிராவிஸின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

பின்னர் அவர் வனத்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து டிராவிஸ் முதல் முறையாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கம் எனது மார்பில் ஏறி நின்றுக் கொண்டு கால்களில் உள்ள தன் கூரிய நகங்களை கொண்டு முகத்தில் கீறியது. என்னை காப்பற்றிக் கொள்ள சிங்கத்தினை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் கடுமையாக தாக்க துவங்கியது. எனக்குள் இருந்த உயிர் பயம், சண்டையிட என்னை மேலும் தயார்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த பாறையில் சிங்கத்தை மோதினேன்.

இதனையடுத்து சிங்கத்தை காலின் அடியில் போட்டு, கழுத்து பகுதியில் காலை வைத்து நெறித்தேன். இறுதியில் சிங்கம் இறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர்.

இந்த தாக்குதலுக்குப் பின்னர், லாரிமர் கவுன்டியின் இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #USmanKilledLion
Tags:    

Similar News