செய்திகள்

பிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்- அரசு எச்சரிக்கை

Published On 2019-02-07 10:31 GMT   |   Update On 2019-02-07 10:31 GMT
பிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் குறித்து அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. #PhilippinesMeasles
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட  பல்வேறு இடங்களில் இந்த ஆண்டின் துவக்கம் முதலே அம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 26 அன்று அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 1813 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 74% அதிகமாகும். குறிப்பாக இந்த அம்மைநோய்க்கான வைரஸ், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  வேகமாக தாக்கக்கூடியதாகும். அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். ஆனால் டெங்கு தடுப்பூசி போடப்பட்டபோது ஏற்பட்ட பக்கவிளைவுகளைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 2.4 மில்லியன் குழந்தைகள் நோய்த்தடுப்பூசி போடாமல் உள்ளனர்.   

இதையடுத்து தற்போது 95% நோய்தடுப்பு வீதம் குறைந்துள்ளது என பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் குண்டோ வெயிலர் கூறினார். மேலும் அம்மை நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குண்டோ கூறினார்.

இந்த வைரஸினால் முதலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பின்னர் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, உடலின் அனைத்து இடங்களிலும் சிவப்பு நிறத்தில் தடித்து இருக்கும். இவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  # PhilippinesMeasles

Tags:    

Similar News