செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்- ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்

Published On 2019-01-28 06:31 GMT   |   Update On 2019-01-28 06:31 GMT
இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Rajapaksa
கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா பதவியில் இருந்து நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்கினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே இலங்கை அரசியலில் குழப்பம் நிலவியது.

அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பம் நீங்கி ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபச்சே ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

“பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு பாராளுமன்றத்தில் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் அவரால் புதிய சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.

இதனால் நாட்டில் பிளவு ஏற்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ரனில் விக்ரமசிங்கே நிறைவேற்றவில்லை. எனவே இது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.

எனவே தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பேசும்போதும் இதே கருத்தை தான் அவர் வலியுறுத்தினார்.

ரனில் விக்ரமசிங்கே அரசு அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து புதிய சட்ட வரையறு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்து விடும் என ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி வருகிறது. #Rajapaksa
Tags:    

Similar News