செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்மை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே அறிவிப்பு

Published On 2018-12-18 11:06 GMT   |   Update On 2018-12-18 11:06 GMT
இலங்கையின் அதிபராகவும், பின்னர் பிரதமராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
 
இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தின் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

கரு ஜெயசூர்யா

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வகித்துவந்த இந்த பதவியில் ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி. சுமித்திரன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பி. ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமீபத்தில் வேறொரு கட்சியில் சேர்ந்த ராஜபக்சேவுக்கு இந்த பதவிக்கு தகுதியற்றவர் என அவர்கள் குறிப்பிட்டனர். தங்களது எதிர்ப்பை உறுப்பினர்கள் கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். அந்த கடிதத்தை பாராளுமன்ற தேர்வு குழு பரிசீலித்து முடிவு செய்யும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
Tags:    

Similar News