செய்திகள்

இலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிரான புதிய தீர்மானம் வெற்றி

Published On 2018-11-16 11:17 GMT   |   Update On 2018-11-16 11:17 GMT
இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூரியா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்த போது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் சிறிசேனாவை  நேற்று மாலை சந்தித்து பேசினார்கள். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்களும் சென்றிருந்தனர்.

மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரகுமார திசநாயகே, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத்பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.



அப்போது ஐக்கிய தேசிய கட்சி மெஜாரிட்டியை நிரூபித்து இருப்பதால் ஜனநாயக முறைப்படி ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், இலங்கையில் சுமூகமாக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் இன்று பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.

நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
Tags:    

Similar News