செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - ராஜபக்சே வெளிநடப்பு

Published On 2018-11-14 05:22 GMT   |   Update On 2018-11-14 05:46 GMT
இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
Tags:    

Similar News