செய்திகள்

நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூம் உடல் பாகிஸ்தான் வந்தது - இன்று மாலை அடக்கம்

Published On 2018-09-14 05:35 GMT   |   Update On 2018-09-14 05:35 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் மனைவி குலசூம் லண்டனில் மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல் இன்று லாகூர் கொண்டு வரப்பட்டது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. #NawazSharif #KulsumNawaz
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம்தேதி உயிரிழந்தார். 68 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு அவரது உயிர் பிரிந்தது.



இதையடுத்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப், அவரது மகள் மர்யம், மருமகன் சப்தார் ஆகியோர் குல்சூம் நவாசின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் வழங்கப்பட்டது. மூவரும் பரோலில் வந்ததும் சூல்சூம் உடலை பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

குல்சூம் உடலை பெறுவதற்காக நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்றார். அங்கு சட்ட நடைமுறைகளை முடித்தபின்னர் குல்சூம் உடலை பெற்றுக்கொண்டு, விமானம் மூலம் இன்று பாகிஸ்தானுக்கு கொண்டு வந்தனர். அவருடன் குல்சூமின் மகள் அஸ்மா, பேரன் ஜாயித் உசைன் ஷெரிப் மற்றும் 11 குடும்ப உறுப்பினர்கள் லண்டனில் இருந்து வந்து சேர்ந்தனர்.

காலை 6.45 மணிக்கு அவரது உடல் லாகூர் விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து ஜதி உம்ரா அருகில் உள்ள ஷெரிப் மருத்துவ நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலையில் இறுதிச்சடங்கு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஊழல் வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், குல்சூமின் மகன்கள் ஹசன், உசைன் நவாஸ் ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாடு திரும்பவில்லை. #NawazSharif #KulsumNawaz

Tags:    

Similar News