செய்திகள்

பாகிஸ்தானின் 13-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி

Published On 2018-09-08 13:29 IST   |   Update On 2018-09-08 13:29:00 IST
பாகிஸ்தானின் 13-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். #PakistanPresident #DrArifAlvi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய அதிபர் பதவி ஏற்புக்கான நடைமுறைகள் தொடங்கின.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.



இதற்கிடையே தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு அதிபர் மாளிகையில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மம்னூன் உசேன், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த திருப்தியுடன் விடைபெறுவதாக கூறினார். தனது பதவிக்காலத்தில் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். #PakistanPresident #DrArifAlvi
Tags:    

Similar News