செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர் விடுதலையாகி தாயகம் திரும்பினார்

Published On 2018-08-13 13:34 GMT   |   Update On 2018-08-13 13:34 GMT
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மத்திய சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் விடுதலை செய்யப்பட்டு இன்று தாயகம் திரும்பினார். #GajanandSharma #Lahoreprison
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது.

அவர்கள் இன்று இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு இன்று பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

விடுதலை ஆனவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மா கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32 வயதில் காணாமல் போனார்.

அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கஜானந்த் சர்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

வாழ்நாளில் இனி ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காணாமல் போவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கஜானந்த் சர்மாவின் பழைய புகைப்படத்துடன் அவரது மனைவி மக்னி தேவி காலம் கடத்தி வந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்ட 29 கைதிகளில் ஒருவராக லாகூர் மத்திய சிறையில்  36 ஆண்டுகள்  அடைத்து வைக்கப்பட்டிருந்த கஜானந்த் சர்மா இன்று தாயகம் திரும்பினார்.

தற்போது 68 வயது முதியவராக இருக்கும் கஜானந்த் சர்மாவை அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர். #GajanandSharma #Lahoreprison
Tags:    

Similar News