செய்திகள்

32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி

Published On 2018-07-19 09:32 GMT   |   Update On 2018-07-19 09:32 GMT
பணிக்கு சேர்ந்த முதல் நாளில் 32 கி.மீ நடந்த இளைஞரின் கதையை கேட்ட முதலாளி கார் ஒன்றை பரிசளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாம் நகர் அருகே உள்ள பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22). கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது. 

அந்த நிறுவனத்திற்கு அவர் போக வேண்டும் என்றால் 32 கி.மீட்டர் தொலைவை கடக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்தரீனா புயலின் காரணமாக இளைஞனின் வீடு தரைமட்டமாகியுள்ளது.

இதனால் வால்டர் புதிய வீட்டில் தன் தாயுடன் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் வேலையும் கிடைத்ததால் முதல் நாள் பணிக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் நடந்து சென்றால் 32 கி.மீட்டரை காலையில் அடைந்துவிடலாம் என்று நடக்கத் துவங்கியுள்ளார்.

அதிகாலை நேரத்தில் வால்டர் தனியாக நடந்து சென்றதை கவனித்த ரோந்து பணியில் இருந்த போலீசார், அழைத்து விசாரித்துள்ளனர். அவர் நடந்தவற்றை கூற, அவர் மீது இறக்கப்பட்ட போலீசார், சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போதைக்கு இங்கிருக்கும் தேவாலயத்தில் தூங்கு என்று கூறி தங்கவைத்துள்ளனர்.



அதன் பின் காலையில் போலீஸ் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்ற போது, தங்களின் தோழியான லேமே என்பவர் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.ஏனெனில் அப்பெண் பிரிமிங்ஹாம் நகருக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருவதால், அவரின் காரில் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது அந்த பெண் வால்டரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்து போய் அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் கூறி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நிறுவனத்தின் முதலாளி, தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வால்டர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் வடித்துள்ளார். இதையும் லேமே தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, பலரும் நிறுவனத்தின் முதலாளி மற்றும் வால்டருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News