செய்திகள்

ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை - மலேசிய பிரதமருக்கு மந்திரிகள் எதிர்ப்பு

Published On 2018-07-13 11:13 GMT   |   Update On 2018-07-13 11:13 GMT
இந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #ZakirNaikextradition #ministerkulasegaran
கோலாலம்பூர்:

வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி  இந்திய அரசினை வங்காளதேசம் நாட்டு அரசுகேட்டுக்கொண்டது.

அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 

இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது  சமீபத்தில் திட்டவட்டமாக  தெரிவித்திருந்தார்.

தனக்கு அரசியல் அடைக்கலம் அளித்துள்ள மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜாகிர் நாயக்,
இஸ்லாமிய மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மலேசியா அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாகிர் நாயக்குக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டதற்கு மூன்று மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பதா வேண்டாமா? என்று ஒருநபர் (பிரதமர்) மட்டுமே தீர்மானிக்க முடியாது. சட்டப்படி, நீதிமன்றம்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி குலசேகரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேபோல், மலேசிய மந்திரிகள் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஜேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுவின் கருத்துக்கு அதிருப்தி குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ZakirNaikextradition #ministerkulasegaran
Tags:    

Similar News