செய்திகள்

தாய்லாந்து குகை மீட்பு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ஹாலிவுட் திரைப்படம்

Published On 2018-07-12 10:56 GMT   |   Update On 2018-07-12 10:56 GMT
தாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மிகவும் சவாலான இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


இந்நிலையில், உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து  குகை மீட்பு சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக  எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் ஹாலிவுட் நிறுவனம் இதை 400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார். அவர் தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.


இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue #ThaiCaveHollywoodMovie 
Tags:    

Similar News