செய்திகள்

அமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து - 5 பேர் பலி

Published On 2018-06-18 05:50 GMT   |   Update On 2018-06-18 06:08 GMT
மெக்சிகோ நாட்டில் இருந்து அத்துமீறி அமெரிக்க எல்லையை தாண்டியவர்களின் காரை அமெரிக்க எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் விரட்டி பிடித்த போது நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். #MexicoUnitedStatesborder
வாஷிங்டன் :

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ள, மெக்சிகோ - அமெரிக்க எல்லையில், நேற்று அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அத்துமீறி 3 கார்கள் மெக்சிகோ எல்லையை கடப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களை கடத்தல்காரர்கள் என்று சந்தேகித்த போலீஸ் அதிகாரிகள், மூன்று கார்களையும் துரத்திப் பிடிக்க முயன்றனர். அதில், இரண்டு கார்களை விரட்டி பிடித்த அதிகாரிகள், அதில் இருந்தவர்களை கைது செய்தனர்.

ஆனால், மூன்றாவது கார் மட்டும் நிற்காமல் செல்லவே அமெரிக்க அதிகாரிகள் விடாமல் அந்த காரை துரத்திச் சென்றனர். 14 பேருடன் சென்ற அந்த கார் மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்தில் சிக்கியது.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். விபத்துக்குள்ளான காரை ஓட்டி சென்ற ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #MexicoUnitedStatesborder
Tags:    

Similar News