செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் கிரீஸ் பிரதமர்

Published On 2018-06-17 06:09 GMT   |   Update On 2018-06-17 06:09 GMT
மகடோனியா நாட்டுடன் செய்த ஒப்பந்தத்துக்கு எதிராக கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் பதவி விலக பாரளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
ஏதென்ஸ்:

கிரேக்க நாடு என்றழைக்கப்படும் கிரீஸ் நாட்டுக்கும் அண்டை நாடான மகடோனியாவுக்கும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் மகடோனியா நாட்டின் பெயர் தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது.

பண்டைக்கால கிரேக்க நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மகடோனியா என்னும் முக்கிய நகரின் பெயரில் மகடோனியா நாட்டின் பெயரும் அமைந்துள்ளதற்கு கிரீஸ் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் பெயரை மகடோனியா குடியரசு என்று மாற்றிகொண்டால் ஐரோப்பிய யூனியனில் இடம் பெறவும், நாட்டோ கூட்டு ராணுவப்படையில் சேர்த்து கொள்வதற்கும் ஆதரவு தருவதாக தற்போதையை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் மகடோனியாவுடன் சமீபத்தில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.


இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகடோனியாவுக்கு கிரீஸ் பிரதமர் ஏராளமான சலுகைகளை அளித்துள்ளதாகவும் கிரீஸ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கிடையில், அலெக்சிஸ் ட்சிப்ராஸ் பதவி விலக வேண்டும் என கிரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில் 127 பேர் ஆதரவாகவும், 153 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. #GreekPM #no-confidence #Greekparliament
Tags:    

Similar News