செய்திகள்

நவாஸ் ஷரிப் மீதான ஊழல் வழக்குகள் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

Published On 2018-06-10 20:36 IST   |   Update On 2018-06-10 20:36:00 IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #NawazSharif
இஸ்லாமாபாத் :

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்து சொகுசுத் தீவில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தொடர்பான ஆவணங்கள் பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் வெளியாகி பரபரப்பினைக் கிளப்பியது.

இந்த ஆவணங்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவி விலகினார். அவர் மீது விரிவான விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதன்படி நவாஸ் ஷரிப்புக்கு எதிரான ஊழல் வழக்கு அந்நாட்டு தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளை விரைந்து முடிக்க, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் இரண்டு மாத கால அவகசம் அளித்திருந்தது. நீதிமன்றம் அளித்த கால அவகசம் நேற்றோடு நிறைவடைந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என தேசிய பொறுப்புடமை நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

நவாஸ் ஷரிப் தரப்பு வழக்கறிஞர், விசாரணையை முடிக்க 6 மாத கால அவசகம் கோரினார். ஆனால், உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷரிப் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், நவாஸ் ஷரிப் மீதான ஊழல் வழக்குகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #NawazSharif
Tags:    

Similar News