செய்திகள்
குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது - தடயவியல் அறிக்கை வெளியானது
துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sridevi
துபாய்:
துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இன்று பிற்பகல், அவரது தடவியல் அறிக்கை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sridevi #TamilNews