செய்திகள்

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமான தாக்குதலில் 19 பேர் பலி

Published On 2017-09-12 00:32 IST   |   Update On 2017-09-12 00:32:00 IST
சிரியா நாட்டின் டேர் எஸ்ஸர் நகரில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்:

சிரியா நாட்டின் டேர் எஸ்ஸர் நகரில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இது போன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் விமான படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 19 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் உள்ள அல்-க்ரயதா கிராமத்தில் ரஷ்யாவின் விமானப படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முகாமில் தங்கியிருந்த அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அருகிலுள்ள ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. மேலும், அங்கிருந்த படகுகளில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இன்றும் ரஷ்ய படையினர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News