செய்திகள்

ஜப்பானில் 2-ம் உலக போர் அணுகுண்டு வீச்சில் காயத்துடன் தப்பியவர் 88 வயதில் மரணம்

Published On 2017-08-31 12:40 IST   |   Update On 2017-08-31 12:40:00 IST
ஜப்பானில் 2-ம் உலக போரின் போது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சில் காயத்துடன் உயிர் தப்பிய 88 வயதான டானிகுச்சி என்பவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார்.
டோக்கியோ:

2-ம் உலக போரின் போது ஜப்பானை ஒடுக்குவதற்காக அமெரிக்கா, ஹிரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணு குண்டுகளை வீசியது.

ஹிரோசிமாவில் குண்டு வீசி 3 நாட்கள் கழித்து 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி நாகசாகியில் அணுகுண்டை வீசியது.

இதில், 70 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதில் தப்பியவர்களில் டானிகுச்சி என்பவரும் ஒருவர்.

அவருக்கு அப்போது 16 வயது. ஹிரோசிமா நகரில் குண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து 1½ கி.மீட்டர் தூரத்தில் அவர் இருந்தார்.

அப்போது குண்டு வீசப்பட்டதில் இவருக்கும் தீ காயம் ஏற்பட்டது. அவரது முதுகு பகுதி மற்றும் இடது கை பகுதி வெந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். பின்னர் தபால்காரராக பணி செய்தார். அவரது முதுகில் உள்ள தீ காய வடு அப்படியே இருந்தது.

நாகசாகி அணுகுண்டு வீச்சு தொடர்பாக இவரிடம் பல்வேறு பத்திரிகைகளும், டி.வி. நிறுவனங்களும் பேட்டி எடுத்து செய்திகள் வெளியிட்டன. இதனால் அவர் உலகப்புகழ் பெற்ற நபராகவும் இருந்து வந்தார்.



மேலும் ஒரு தடவை இவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. 88 வயதான அவர் நேற்று உடல் நலம் சரியில்லாமல் உயிர் இழந்தார்.

கடைசியாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோய்க்கு கூட அணுகுண்டு வீச்சுதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Similar News