செய்திகள்

இலங்கை கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களுக்கு ஜூலை 7 வரை சிறை

Published On 2017-06-24 11:57 GMT   |   Update On 2017-06-24 11:57 GMT
இலங்கை கடலோரக் காவல் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் எட்டு பேரையும் ஜூலை 7-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு:

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.

நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர்.


பின்னர் அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜூலை 7-ம் தேதிவரை சிறையில் அடைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து எல்லை கடந்துவந்து மீன் பிடித்ததாக இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News