செய்திகள்

வழிபாட்டு தல தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் 130 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Published On 2017-02-20 20:08 GMT   |   Update On 2017-02-20 20:08 GMT
பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையில், கடந்த 5 நாட்களில் நாடுமுழுவதும் சுமார் 130 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
லாகூர்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் சுபி பிரிவினரின் வழிப்பாட்டு தலம் ஒன்றில் கடந்த 16-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மும்முரமாக இறங்கினர். ராணுவத்தினரின் இந்த அதிரடி நடவடிக்கையில், கடந்த 5 நாட்களில் நாடுமுழுவதும் சுமார் 130 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் ராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதிகள் ஆவர்.

இந்த ராணுவ நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுதகிடங்குகள், பதுங்குகுழிகள் ஆகியவை துவம்சம் செய்யப்பட்டன. மேலும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கக்கூடிய 350 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே மற்றொரு நடவடிக்கையாக, கடந்த 13-ந் தேதி லாகூர் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை கைது செய்ய ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேடுதல் வேட்டையின் போது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் 15 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Similar News