செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றம்

Published On 2017-02-13 05:01 GMT   |   Update On 2017-02-13 05:01 GMT
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வீடுவீடாக சோதனை நடத்தப்படுகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்ற பின் டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, தற்போது ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கையில் போலீசாரும், குடியுரிமை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அட்லாண்டா, அஸ்டின், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ், நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் வீடு வீடாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அப்போது குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களில் குற்ற பின்னணி இல்லாதவர்களும் அடங்குவர்.

அதன்படி இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் மட்டும் 200 பேர் கைதாகி உள்ளனர். கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அமெரிக்காவில் ஆவணம் இன்றி சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் இடையே கடும் பீதி நிலவுகிறது.

எனவே டிரம்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நகரில் வாஷிங்டன் சதுக்க பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.

Similar News