செய்திகள்

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-01-19 00:01 GMT   |   Update On 2017-01-19 00:01 GMT
தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.
லாகூர்:

பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப் சோட்டு. தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இவரது தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் இந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லாகூரில் தாக்குதல் நடத்த தனது ஆதரவாளர்களுடன் ஆசிப் சோட்டு வருவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 4 மோட்டார் சைக்கிள்களில் ஆதரவாளர்களுடன் வந்த அவரை ஷேகுர்புரா என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை சரண் அடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்காமல், அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால், போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இதில், ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் பலியானார்கள். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. 

Similar News