செய்திகள்

கிளிநொச்சி சந்தையில் 10 மணி நேரம் பற்றி எரிந்த தீ: ஏராளமான கடைகள் சாம்பல்

Published On 2016-09-17 13:00 GMT   |   Update On 2016-09-17 13:00 GMT
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலாகின.
கிளிநொச்சி:

இலங்கையின் கிளிநொச்சியில் பொது சந்தை உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் நேற்று இரவு 8 மணியளவில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவெனப் பரவி அருகில் உள்ள கடைகளும் பற்றி எரிந்தன.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News