செய்திகள்

வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதி: விரைவில் புதிய அப்டேட்

Published On 2018-01-21 13:13 IST   |   Update On 2018-01-21 13:13:00 IST
வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அடுத்த மாத வாக்கில் வழங்கப்படலாம் என்றும், பிப்ரவரி மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் பரிமாற்றம் செய்யும் ஆப்ஷனில் வாட்ஸ்அப் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

பணம் பரிமாற்றம் செய்யும் வசதிக்கென வாட்ஸ்அப் வங்கிகளுடன் இணைந்திருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை அறிந்து கொள்ளும் என கூறப்படுகிறது. பணம் பரிமாற்றத்தை ஒருங்கிணைந்த பேமெண்ட் இன்டர்ஃபேஸ் கொண்டு நிறைவு செய்யும். வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் UPI சார்ந்த வழிமுறையை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பணம் பறிமாற்றம் செய்ய UPI  அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. டிசம்பர் 2017-இல் மட்டும் 14.5 கோடி பறிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

அதன் படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை வாட்ஸ்அப் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் பணம் பரிமாற்றம் செய்ய மத்திய அரசின் அனுமதியை வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெற்றது. 

செயலியில் இந்த அம்சத்தை செயல்படுத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். எஸ்.எம்.எஸ். போன்று அதிவேகமாக பணம் அனுப்ப பல்வேறு நிலைகளில் என்க்ரிப்ஷன் செய்ய வேண்டும் என மூத்த வங்கி அதிகாரி தெரிவித்தார்.

Similar News