தமிழ்நாடு செய்திகள்

கோவில் நில ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றினால் முறைகேடு நடக்கலாம்! - ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

Published On 2025-10-29 13:36 IST   |   Update On 2025-10-29 13:36:00 IST
  • கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
  • கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?

சென்னை:

தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.

இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

Similar News