தமிழ்நாடு செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விமர்சனம்: இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Published On 2025-07-15 13:48 IST   |   Update On 2025-07-15 13:48:00 IST
  • சென்னையில் 40, 50 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோவில்களில் குடமுழுக்குகளை நடத்தி வருகிறோம் .
  • எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை வருகிற தேர்தலில் வாக்கு வங்கியால் ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

சென்னை மண்ணடி சாம்பய்யர் தெருவில் உள்ள தில்லை விநாயகர் கோவிலுக்கு வெள்ளி பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

கடந்த மாதம் 5-ந்தேதி தில்லை விநாயகர் கோவிலில் நன்னீராட்டு விழா நடைபெற்றது. துறையின் ஆணையாளர் பொது நிதியில் இருந்து இந்த நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் அதிக அளவு குடமுழுக்கு நடந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

3300-க்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500 கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் 40, 50 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோவில்களில் குடமுழுக்குகளை நடத்தி வருகிறோம் .

இன்றயை தினம் தில்லை விநாயகர் கோவிலுக்கு பக்த ஜனசபை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெள்ளிகளால் ஆன பூஜை பொருட்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு துறை சார்ந்த அமைச்சராக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அவமதிக்கப்பட்டது சமூக விரோத செயல். ஏதாவது ஒரு வகையில் வன்முறையை விதைக்க வேண்டும் என்கின்ற வகையில் நினைக்கிறார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களை சூழ்ச்சிகள் வேர் அறுக்கப் டுகிறது. அமைதியை குலைக்க முற்படுகிறார்கள்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை நாங்கள் கூட திருப்பிச் சொல்லலாம், இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இதை மக்களை ஏமாற்றுவதற்கான சூழலாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இன்று மக்களை தேடி அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை போக்குவதற்காக இந்த முன்னோடியான திட்டத்தை எடுத்திருக்கிறார். ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து மாதம் தோறும் புது திட்டங்களை கொண்டு வந்து மக்களுடைய முழு நம்பிக்கையை பெறுகின்ற முதல்வரின் புதிய திட்டமாக தான் மக்கள் கருதுகிறார்கள். ஏமாற்றுபவர்கள் தான் ஏமாற்றத்தை பற்றி பேசுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை வருகிற தேர்தலில் வாக்கு வங்கியால் ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News