தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் திட்டம் ரத்து எதிரொலி- நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-25 09:30 IST   |   Update On 2025-01-25 09:30:00 IST
  • அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
  • ‘டங்ஸ்டன்’ திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது.

மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான 'டங்ஸ்டன்' கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் இந்த கனிமம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவன நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து மத்திய அரசிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு 4,981.64 ஏக்கர் நிலத்தில் 'டங்ஸ்டன்' கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் மாதம் உரிமம் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.

ஏற்கனவே, சுரங்கம் அமைய இருந்த பகுதியை பல்லுயிர் பெருக்க மண்டலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்து இருந்தது. எனவே, கனிமச்சுரங்கம் இந்த பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் வாதிட்டனர். அதுபோல தமிழர் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடவரைக் கோவில்கள் போன்ற பண்பாட்டு, கலாசார அம்சங்களும் அங்கு இருப்பதால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமான தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

கடந்த 9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில், 'டங்ஸ்டன்' கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக பா.ஜனதாவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. மாநில தலைவர் அண்ணாமலை அந்த பகுதி விவசாயிகளுடன் பேசி, திட்டத்தை ரத்து செய்ய துணை நிற்பதாக கூறினார். மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அதன்பேரில் 'டங்ஸ்டன்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் என்று சொல்லப்படும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மீண்டும் சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோல், 'டங்ஸ்டன்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார்.

டங்ஸ்டன் திட்ட போராட்டக் குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர். இதையடுத்து அவர் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News