டிச.14-ந்தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து
- சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.
- மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி கடந்த 14-ந்தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு நடந்தது. 15 மாவட்ட மையங்களில் 4,186 பேர் இத்தேர்வை எழுதினர்.
இந்த நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாகப் பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.
மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.