திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்... CISF வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!
- மேல்முறையீடு வழக்கை நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்
- CISF படையினருடன் இந்து அமைப்பினர் மலை ஏற அனுமதி மறுப்பு
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். இன்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைமீறியும் போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளு முள்ளலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார். இந்நிலையில் மலைமீது ஏற சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்திருப்பதாலும், 144 தடை உத்தரவாலும் மலை ஏற அனுமதி இல்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.