'தமிழ்நாடு நாள் விழா' நாளை கொண்டாட்டம்- 100 தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி
- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
சென்னை:
தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேரறிஞர் அண்ணாவும் தமிழும்' என்ற தலைப்பில் வக்கீல் த.ராம லிங்கம், 'இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
தொடர்ந்து அவர், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வரவேற்புரையாற்றுகிறார். செயலர் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப்பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.