நிதி நிறுவன மோசடி வழக்கு... தேவநாதன் யாதவுக்கு ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு
- பல மாதங்கள் கடந்தும் வாடிக்கையாளா்களுக்கு வைப்புத் தொகையோ அல்து வட்டியோ எதுவும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- தலைமறைவாக இருந்த தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மயிலாப்பூரில் இந்து நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ் இருக்கிறார். இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தோ்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
இதற்கிடையே நிதி நிறுவனம் சார்பில் அதிக வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் தேவநாதன் யாதவ் பணம் பெற்றதாகவும், அவற்றை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் லட்சக்கணக்கில் பணத்தை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். ஆனால் பல மாதங்கள் கடந்தும் வாடிக்கையாளா்களுக்கு வைப்புத் தொகையோ அல்து வட்டியோ எதுவும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி தேவநாதன் யாதவ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு ஜாமின் வழங்க முடியாது என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.