சென்னையில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம்
- மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
- காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.
சென்னை:
மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
முதலில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
இந்த சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுபான விற்பனை கடையில் ஒப்படைக்கும்போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.