தமிழ்நாடு செய்திகள்

பாப்பாக்குடியில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

Published On 2025-07-29 09:06 IST   |   Update On 2025-07-29 13:41:00 IST
  • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
  • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News