தமிழ்நாடு செய்திகள்

ஆம்னி பேருந்துகள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

Published On 2025-10-12 16:32 IST   |   Update On 2025-10-12 16:32:00 IST
  • நெல்லைக்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்குள் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை.

பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்திவிட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி கேட்டப்பட்டது. அப்போது "500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதில் சுமார் 10 நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அவர்கள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றால், தீபாவளி பண்டிகைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News