என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்னி பேருந்து கட்டணம்"
- நெல்லைக்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்குள் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை.
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்திவிட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி கேட்டப்பட்டது. அப்போது "500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதில் சுமார் 10 நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அவர்கள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றால், தீபாவளி பண்டிகைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
- ஒரு சில ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு வரை கூடுதலாக வசூலித்தனர்.
- ஏ.சி பஸ்களில் வழக்கமான ரூ.800 கட்டணம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.1500 வரை வசூலிக்கப்பட்டது. இன்றும் அதே கட்டண உயர்வு நீடித்து வருகிறது.
போரூர்:
தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பள்ளிகளுக்கு ஏற்கனவே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வார விடுமுறை நாட்கள் என அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதிகரித்து உள்ளனர்.
வெளியூர் செல்பவர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் ஆம்னி பஸ் நிலையத்தில் பயணிகள் நேற்று இரவு அதிகளவில் குவிந்து இருந்தனர். இதை பயன்படுத்தி ஒரு சில ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு வரை கூடுதலாக வசூலித்தனர்.
ஏ.சி பஸ்களில் வழக்கமான ரூ.800 கட்டணம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.1500 வரை வசூலிக்கப்பட்டது. இன்றும் அதே கட்டண உயர்வு நீடித்து வருகிறது.
இதற்கிடையே சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் திருச்சி உள்ளிட்ட இடையில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்து விட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ஒரு பயணி கூறும்போது, மதுரை செல்லும் அரசு சிறப்பு பஸ்சில் இடையில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முழு கட்டணம் செலுத்துவதாக கூறியும் பஸ்சில் ஏற்ற டிரைவர், கண்டக்டர் மறுத்துவிட்டனர் என்றார்.
- தனியார் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்துக் கட்டணம்.
- பொதுமக்கள், பேருந்து உரிமையாளர் பாதிக்காத வகையில் நடவடிக்கை வேண்டும்.
பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை ஒட்டி வந்தால், குடும்பத்தினருடனும், கிராம மக்களுடனும் இணைந்து பண்டிகையை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வது என்பது இயல்பான ஒன்று.
இதுபோன்ற தருணங்களில், அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது என்பது வாடிக்கை. இருப்பினும், அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகின்றன.
இந்த வகையில், தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளை அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பேருந்துகளின் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன.
உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு 3,200 ரூபாயும், சென்னையிலிருந்து திருச்சிக்கு 3,000 ரூபாயும், சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு 3,850 ரூபாயும், சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 4,000 ரூபாயும், ஓசூரிலிருந்து கோவில்பட்டிக்கு கிட்டத்தட்ட 4,000 ரூபாயும், வசூலிக்கப்படுவதாகவும், இந்தக் கட்டணங்கள் தனியார் பேருந்து நிறுவனங்களின் இணையதளத்தில் வெளிப்படையாகவே இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
சாதாரணமாக 800 ரூபாய், 900 ரூபாய் என்றிருக்கக்கூடிய பேருந்துக் கட்டணங்கள் எல்லாம், இதுபோன்ற தருணங்களில் 3,000 ரூபாய், 4,000 ரூபாய் என்று விமானக் கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல.
இவ்வாறு தனியார் பேருந்து நிறுவனங்கள் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு போக்குவரத்து துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், பெரும்பாலானோர் புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துக் கட்டணத்தை வரைமுறை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்துக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் நியாயமான கட்டணத்தை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






