தமிழ்நாடு செய்திகள்

கோவில்களில் ஏற்பட்ட பக்தர்கள் உயிரிழப்புக்கு உடல்நலக் குறைவே காரணம்- சட்டசபையில் அமைச்சர் தகவல்

Published On 2025-03-26 12:57 IST   |   Update On 2025-03-26 12:57:00 IST
  • 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
  • இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

தமிழக கோவில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-

திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 4 கோவில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக்குறைவின் காரணமாக நடைபெற்ற சம்பவம் ஆகும்.

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான்கோவில்களில் அதிகமாக கூட்டம் கூடுகின்ற கோவில்களுக்கு மருத்துவ வசதி தேவை என்ற நிலையிலே இரண்டே இரண்டு கோவில்களில் இருந்த மருத்துவ வசதியை 17 கோவில்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.

கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று ஒரு நீதிபதி நோய்வாய் பட்டு மயங்கிய சூழ்நிலையில் அன்றைக்கு அந்த நீதிபதி உயிரை காப்பாற்றியது அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர்கள் தான்.

இந்த 17 மருத்துவமனைகளில் இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது, இதற்கெல்லாம் முதலமைச்சர் எடுத்த பெரும் முயற்சிகள் தான் காரணம். சுமார் ரூ. 1711 கோடி மதிப்பில் பெருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News