தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Published On 2025-09-02 11:09 IST   |   Update On 2025-09-02 11:09:00 IST
  • அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
  • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.

வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் பரவி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News