தமிழ்நாடு செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறும்- சேகர்பாபு

Published On 2025-07-13 15:23 IST   |   Update On 2025-07-13 15:23:00 IST
  • 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
  • ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஈரோடு திண்டல் மலையில் வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும்.

இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை 1,120கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

பழனி இரண்டாம் கட்ட திருப்பணிக்கு ரூ. 58 கோடி அரசே வழங்கி 54 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பெரு திட்டத்தின் கீழ் ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் செப்டம்பர், நவம்பர் மாதம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

திருத்தணி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு மாற்று பாதை உருவாக்க ரூ. 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான சாமிமலைக்கு 100 படிகள் இருப்பதால் படி ஏறும் பக்தர்கள் சிரமம் கருதி மின் தூக்கி அமைக்கவும், மருதலை கோவிலும் படி கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆட்சியில் அனைத்து சைணவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் அமைக்கப்பட்ட உள்ளது.

உலக அளவிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும்.

இந்த ஆட்சியில் மட்டும் 1,400கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதி வந்துள்ளது,

கடந்த எந்த ஆட்சியில் இதுபோன்ற உபயதாரர்கள் நிதி வந்ததில்லை. உபயதாரர்கள் நிதி பயன்படுத்தப்பட வில்லை. இந்த ஆட்சியில் அனுமதி அளித்ததால் உபயதாரர்கள் நிதி வழங்க அதிகமாக முன் வந்தனர்.

இந்த ஆட்சியில் உபயதாரர்கள் நிதி எண்ணத்திற்கு ஏற்ப திருப்பணிகள் செலவு செய்யப்படுகிறது. மனம், எண்ணம் நிறைவடைந்ததால் உபயதாரர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News