தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

Published On 2025-08-29 13:50 IST   |   Update On 2025-08-29 13:50:00 IST
  • வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
  • கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது.

இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.

இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.

வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

Tags:    

Similar News