தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை

Published On 2025-10-25 09:46 IST   |   Update On 2025-10-25 09:46:00 IST
  • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின.

இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி என மொத்தமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 41 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் இந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது. இதேபோல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News