தமிழ்நாடு செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2025-07-30 15:01 IST   |   Update On 2025-07-30 15:01:00 IST
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.
  • வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு வருகின்ற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.

இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

கடந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆன நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News