தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பஸ் சேவை: வருகிற 11-ந்தேதி முதல் தொடக்கம்

Published On 2025-08-08 13:49 IST   |   Update On 2025-08-08 13:49:00 IST
  • அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.
  • தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

சென்னை:

சென்னையில் முதல் முறையாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ் சேவை வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்து உள்ளாா்.

டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பஸ்களை கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் கூறியதாவது:-

வியாசா்பாடி பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களையும், 80 சாதாரண மின்சார பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 11-ந்தேதி முதல் இந்த பஸ்களின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News