கரூரில் பிரம்மாண்டமாக தொடங்கிய தி.மு.க. முப்பெரும் விழா
- தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
- கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.
தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
கட்சிப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணிமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.